
ரொம்பவே வித்தியாசமான கதைதான் (?). அப்பாவைக் கொன்றவனையே பொண்ணு கல்யாணம் பண்ணிக்கிறா. இதுமாதிரி கதைய இதுவரைக்கும் நீங்க எங்கயாச்சும் கேட்டிருக்கீங்க? சான்சே இல்ல... அந்த அளவுக்கு புதுமையான கதை.
போலீஸ் அதிகாரியையே போட்டுத்தள்ளுகிற பிளாக், காவல்துறையில் இருந்தாலும் கொலைகள் எல்லாம் பண்ணிக்கொண்டிருக்கிறான். ஒரு கட்டத்தில் லாரா (நமீதா) அப்பாவையும் போட்டுத்தள்ளிடுறான். இதை கண்முன்னே பார்க்கிற லாராவின் தங்கச்சி ஊனமாகிடுறா. பல கொலைகள், வெட்டுக் குத்துன்னு பண்ணிட்டிருக்கிற, பிளாக்கிடம் பாரில் டேன்ஸ் ஆடுற லாராவை தங்களிடம் ஒப்படைத்தால் பல லட்சஙகள் தருவதாக சொல்லிக்கொண்டு 3 பேர் வருகிறார்கள். அவர்களுக்காக, லாராவை கடத்தப் போகும் பிளாக்குக்கு லாராவை பிடித்துப்போகிறது. அவளை அடைந்தே தீரவேண்டும் என்று பிளாக் காய்நகர்த்த, அவளுக்கு இவன்தான் தன் அப்பாவை கொன்றவன் என்று தெரியவர அவனை வெறுக்கிறாள். அவனது தொந்தரவுகள் தொடந்து கொண்டே இருக்க, கடைசியில் அவனை திருமணம் செய்ய சரி என்கிறாள். அவள் சம்மதம் தந்துவிட்ட சந்தோஷத்தில் பிளாக் லாராவை அணைக்க, கத்தியால் அவனைக் குத்திவிட்டு அங்கிருந்து எஸ்கேப் ஆகிறாள் லாரா.
தங்கையுடன் கேராளவுக்கு வரும் லாரா அங்கு வீடு வாடகைக்கு பிடித்து தங்குகிறாள். ஒரு ஜிம்மில் பயிற்சியாளராக வேலைக்கு சேர்கிறாள். அங்கு வரும் கணேஷ் என்பவன் அவளை அடைய முயற்சிக்க அந்த நேரத்தில் ஆபத்பாந்தவனாக வந்து அவளை காப்பாற்றுகிறான் போட்டோகிராபர் அமீர் உஸ்மான். அவன் அவளை படம் பிடித்து ஒரு பத்திரிகையில் போட லாராவைத்தேடி வரும் பிளாக்கின் ஆட்கள் கண்ணில் அந்தப் பத்திரிக்கை பட்டுவிடுகிறது. கேரளா வந்து அவளை தேடுகிறார்கள். போட்டோகிராபர் அமீர் பாதுகாப்பில் அவள் இருப்பது தெரிந்து அவளை துரத்துகிறார்கள். இதற்கிடையில அமீர் உடனான நட்பு இருவருக்கும் காதலாக மலர்கிறது. செத்துவிட்டான் என இவ்வளவு நாளும் நினைத்திருந்த பிளாக் உயிருடன் இருப்பது கண்டு அதிர்ச்சி அடைகிறாள் லாரா. பிளாக்கிடம் இருந்து லாராவை காப்பாற்றுவதற்காக அவளை அவனது ஏரியாவிற்கு கூட்டிவருகிறான் அமீர். இங்கும் வந்துவிடுகிற பிளாக் டீம் ஒரு உண்மையை போட்டு உடைக்கிறது.
‘போட்டோகிராபர் அமீர் லாராவை பல லட்சங்களுக்கு விற்பனை செய்ய உள்ளதாகவும், அதிலிருந்து காப்பாற்றவே பிளாக் அவளை கல்யாணம் செய்து கொள்ள முடிவெடுத்ததாகவும்’ பிளாக் சொல்கிறான். அமீர் நல்லவன் இல்லை. அவன், பெண்களை வெளிநாடுகளுக்கு கடத்தி விற்பனை செய்பவன் என்னும் உண்மை தெரிவர கடைசியில் பிளாக்குடன் சேர்கிறாள் லாரா.
லாராவாக நமீதா. நமீதா படமாச்சே பூமாதிரி இருக்கும் என்று நினைத்தால் படம் புயல் மாதிரி பக்கா ஆக்ஷன். பல படங்களில் இருந்து பிட்டு பிட்டா எடுத்து சேர்த்து வெச்சமாதிரி காட்சி அமைப்புகளும் திரைக்கதையும். இடைவேளை வரை என்ன... படம் முழுக்கவே... பிளாக் கேரக்டர் செய்வதெல்லாம் ரொம்ப ஓவர். டப்பு டிப்புன்னு சுட்டுகிட்டே இருக்காங்க. யார் செத்தாலும் போலீஸ் மட்டும் வரகாணோம். போலீஸ் அதிகாரியை சுட்டு கொன்னாலும் கூட ஒரு போலீஸ் கூட பிளாக்கை தேடலை. ஏன் எதற்குன்னு தெரியாமலே சண்டை போடுறாங்க. ப்ளாக் கூடவே வருகிற, அலட்டல் இல்லாத அவரது சகா கௌரி கேரக்டர் சூப்பர். மத்தபடி லாப்டப்பும் கையுமா ஓடுற ரவுடி இவனுங்களாதான் இருப்பானுங்க போலிருக்கு. பத்து நிமிஷத்துக்கு ஒருதடவை ஒரு பாட்டை போட்டிட்டே இருக்காங்க. சொதப்பல் ரகம். கதை இல்லாம எதைப் போட்டா என்ன கருமம்... கருமம்... காட்சிகள் எல்லாமே சப்பென்று இருக்கின்றன.
பிளாக்கை குத்தியவுடன் இடைவேளை விடுவதால், ஒருவேளை படம் முடிஞ்சுது போல என்று எண்ணத்தோன்றுகிறது. பெருமாள் என்றொரு கேரக்டரும் இடையில் வருகிறது அவனும் பிளாக்கும் மோதிக் கொள்கிறார்கள். சண்டை காட்சிகளை அதிகநேரம் காட்டுவதால் வெறுப்படிக்கிறது (யாருப்பா அந்த எடிட்டர்?) போட்டோகிராபர் அமீர் கேரக்டரை எங்க இருந்து புடிச்சாங்களோ, அவருக்கு யாருங்க வாய்ஸ் கொடுத்தது. டயர்ல இருந்து வால்வ் பிடுங்கின மாதிரி ஒரு வாய்ஸ்... கொடுமைடா சாமி!
நமீதாவை ஜிம்மில் கலாய்க்கும் கணேஷ் கேரக்டரும் அருவை (எங்க இருந்துதான் புடிச்சங்களோ...) பாட்டெல்லாம் தெலுங்கு பாட்டு மாதிரி ஒரே சத்தமா இருக்கு. பிளாக் வரும்போதெல்லாம் அனகோண்டா மியூசிக்கா போட்டு பயமுறுத்துறாங்க. வேற மியூசிக்கே கிடைக்கால போலிருக்கு. மூணு நாலு பேரையே திருப்பித் திருப்பி காட்டுறதால ரொம்பவே போர் அடிக்குது. போட்டோகிராபர் அமீர் வந்த பிறகு படம் கொஞ்சம் சூடு பிடிக்கும்னு பார்த்தா... மறுபடியும் புஸ்ஸுனு ஆயிடுது... நமீதாவையே போட்டு விளம்பரம் பண்ணினதால இது நமீதா படம்னு பார்த்தா ப்ளாக்தான் படம்புள்ளாவரான். பேசாம படத்திற்கு பிளாக்ன்னே வெச்சிருக்கலாம்... கடைசிவரைக்கும் பிளாக் நல்லவனா கெட்டவனான்னு யாராலையும் கண்டே பிடிக்க முடியாது... அப்படி ஒரு கேரக்டர்.
நமீதா கால்ஷீட் கிடைச்சதால வேறு வழியில்லாம இந்த படத்தை எடுத்திருப்பங்க போலிருக்கு.