மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூரில் இன்று சிறிலங்காப் படையினருடன் சேர்ந்தியங்கும் துணைப் படைக்குழுவைச் சேர்ந்த களுவாஞ்சிக்குடி எருவில்பற்று பிரதேச சபை உப தலைவர் உட்பட பிரதேச சபை உறுப்பினர்கள் இருவர் அடையாளம் தெரியாத நபர்களினால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
முச்சக்கர வாகனத்தில் வந்த இருவரே இவர்கள் இருவரையும் இன்று திங்கட்கிழமை பிற்பகல் 2:30 மணியளவில் சுட்டுக்கொன்றிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
எருவில்பற்றைச் சேர்ந்த ஐயாத்துரை புஸ்பநாதன், அற்புதராஜன் ஆகியோரே சுட்டுக்கொல்லப்பட்டவர்கள் ஆவர்.
வீதியில் சென்ற இவர்கள் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டபோது உயிரிழந்துள்ளனர் என்று கூறப்படுகின்றது.
இச்சம்பவத்தையடுத்து அப்பகுதியில் பதற்றம் நிலவுகின்றது.
ஏற்கனவே துணைப் படைக்குழுவான பிள்ளையான் குழுவுக்கும் முஸ்லிம் மக்களுக்கும் இடையில் முறுகல் நிலை இருந்து வந்த நிலையில் பிள்ளையான் குழுவைச் சேர்ந்த பிரதேச சபை உறுப்பினர்கள் இருவர் முஸ்லிம்கள் செறிந்து வாழும் ஏறாவூரில் சுட்டுக்கொல்லப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை காத்தான்குடியில் இடம்பெற்ற வன்முறைகள் மற்றும் அங்கு நிலவும் பதற்றம் குறித்து துணைப்படைக்குழுவின் தலைவரான பிள்ளையானும், மாகாண சபை அமைச்சரான ஹிஸ்புல்லாவும் இன்றைய நாள் பேச்சுவார்த்தை நடத்தியிருந்த நிலையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி: புதினம்
0 comments:
Post a Comment