மட்டக்களப்பு கல்லடியில் நேற்று பிற்பகல் முஸ்லிம் வர்த்தகர் ஒருவர் அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிக்கொல்லப்பட்டதையடுத்து காத்தான்குடி ஊடாகப் பயணித்த நான்கு தமிழர்கள் நேற்று மாலை வாள்வெட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவங்களால் முஸ்லிம்கள் செறிந்து வாழும் காத்தான்குடியிலும், ஆரயைம்பதியிலும் மீண்டும் பதற்றகரமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
கல்லடி மயானத்தை அண்மித்துள்ள வீதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12:30 மணியளவில் அப்துல் பாருக் குத்தூஸ் (வயது 48) என்பவர் அடையாளம் தெரியாதவர்களால் வெட்டிக்கொல்லப்பட்டார்.
மரக்கறி வியாபாரியான இவர் காத்தான்குடியைச் சேர்ந்தவர் என்றும் இவர் என்ன காரணத்திற்காக படுகொலை செய்யப்பட்டார் என்பது தெரியவரவில்லை என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவத்தையடுத்து காத்தான்குடி முஸ்லிம்கள் மத்தியில் ஒருவித பதற்றமான நிலை காணப்பட்டது.
வியாபார நிலையங்கள் மூடப்பட்டு போக்குவரத்துக்கள் நிறுத்தப்பட்டன.
இச்சம்பவம் குறித்து உடனடியாக காவல்துறையினருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து காவல்துறையினரும் அதிரடிப்படையினரும் காத்தான்குடியில் குவிந்து வன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர்.
இந்நிலையிலேயே நேற்று மாலை 5:30 மணியளவில் காத்தான்குடி எல்லைக்கிராமம் ஒன்றின் ஊடாகப் பயணித்த நான்கு தமிழர்கள் கடுமையான வாள் வெட்டுக்கு இலக்காகினர்.
வாள்வெட்டுக்கு இலக்காகிய அனைவரும் தமிழர்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது.
கட்டட நிர்மாண வேலைக்குச் சென்றுவிட்டு இவர்கள் வீடு திரும்பிக்கொண்டிருந்த போதே தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர் என்று கூறப்படுகின்றது.
கிரான்குளத்தைச் சேர்ந்த ரவீந்திரன் (வயது 30), மாவிலங்குதுறையைச் சேர்ந்தவர்களான பதீஸ்வரன் (வயது 17), இராசதுரை (வயது 42), தாளங்குடாவைச் சேர்ந்த சிவானந்தம் (வயது 49) ஆகியோரே வாள்வெட்டுக்கு இலக்கானவர்கள் ஆவர்.
இச்சம்பவங்களையடுத்து முஸ்லிம்கள் செறிந்து வாழும் காத்தான்குடியிலும் தமிழ்மக்கள் செறிந்து வாழும் பகுதிகளிலும் பதற்றகரமான சூழ்நிலை நிலவுகின்றது.
இன்று காலை காத்தான்குடி ஊடாக போக்குவரத்துக்கள் இடம்பெற்று வருகின்ற போதும் அவை அதிரடிப்படையினரதும் காவல்துறையினரதும் கடுமையான பாதுகாப்புக்கு மத்தியிலேயே இடம்பெறுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
நன்றி: புதினம்
0 comments:
Post a Comment