திருகோணமலை மூதூர் கடற்றொழிலாளர்கள் மீதான மீன்பிடித் தடையானது மகிந்தவின் ஒரு அரசியல் பழிவாங்கலா என்று சிறிலங்கா தலைநகர் கொழும்பில் இருந்து வெளியாகும் "த மோர்ணிங் லீடர்" வார ஏடு கேள்வி எழுப்பியுள்ளது. கடந்த புதன்கிழமை வெளிவந்த த மோர்ணிங் லீடரின் கட்டுரை:
மூதூர் பகுதியில் காலை உணவை உட்கொள்ளாத சில பாடசாலை மாணவ, மாணவிகள் மயக்கமடைந்தனர்.
கிழக்கு வாழ் முஸ்லிம்கள் பிரச்சினைக்கு மேல் பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர்.
மூதூரில் மீன்பிடித் தடை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. 3,000-க்கும் அதிகமான குடும்பங்கள் மீன்பிடித் தொழிலை நம்பியே தமது வாழ்க்கையை கொண்டு நடாத்துகின்றனர்.
உண்மையிலேயே பாதுகாப்பு காரணங்களுக்காகவா அல்லது வேறும் அரசியல் பழிவாங்கல்களின் காரணமாகவா இந்த மீன்பிடித் தடை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என்பதை விளங்கிக்கொள்ள முடியாது மக்கள் குழப்பமடைந்துள்ளனர்.
மீன்பிடித் தடை உத்தரவினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணங்களைப் பெற்றுக்கொடுக்க பல குழுக்கள் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
குறைந்தபட்சம் கஞ்சி ஒன்றையேனும் காலை நேரத்தில் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மீன்பிடித் தொழிலைத் தவிர வேறு தொழிலில் ஈடுபட வாய்ப்புக்கள் உண்டா? என்பது மூதூர் மீனவர்களைப் பொறுத்த வரையில் கேள்விக்குறியாகவே அமைந்துள்ளது.
மூதூர் மீனவர்களுக்கு உலகின் அனைத்துப் பாகங்களிலிருந்தும் அனுதாப அலை திரண்டு வந்த வண்ணம் உள்ளது.
அமெரிக்காவில் உள்ள நண்பர் ஒருவர் மின்னஞ்சல் மூலம் மூதூர் மீனவர்களின் நிலைமை குறித்து எனக்கு தகவல் அனுப்பியிருந்தார்.
கிழக்கு வாழ் மக்கள் இயற்கை பேரழிவு மற்றும் மனிதனால் மேற்கொள்ளப்பட்ட அழிவு என்பவற்றினால் சொல்லொனாத் துயரங்களை கடந்த காலங்களில் அனுபவித்துள்ளனர்.
முஸ்லிம் மீனவர்கள் இரண்டு கிலோ மீற்றர்களுக்கு மட்டுமே செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ள அதேநேரத்தில் சிங்கள மீனவர்களுக்கு அவ்வாறான எவ்வித கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை.
திருகோணமலையில் நூற்றாண்டுகளாக மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வரும் முஸ்லிம்களுக்கு இன ரீதியான தடைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
கிழக்கு முஸ்லிம்கள் பயங்கரவாதத்திற்கு ஆதரவாகவோ அல்லது அரசாங்கத்திற்கும் எதிராகவோ செயற்பட்டுள்ளனரா என்ற கேள்விக்கு எந்தவித பதிலும் இல்லை என்றே குறிப்பிடலாம்.
கடந்த 10 ஆம் நாள் திருகோணமலையில் கப்பல் மூழ்கடிக்கப்பட்டதனைத் தொடர்ந்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்ததாகவும், மீன்பிடித்தலுக்கான தடை நேற்றைய நாள் முதல் தளர்த்தப்பட்டதாகவும் கடற்படை பேச்சாளர் "சண்டே லீடர்" பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார்.
எனினும் கடந்த 20 மற்றும் 21 ஆம் நாட்களில் மீன் பிடித்தொழிலுக்கு அனுமதிக்கப்பட்ட போதிலும் அதன் பின்னர் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
பருவகால மாற்றம் காரணமாக மீன்பிடித் தொழிலுக்கு உசிதமாக காலங்களில் மீன்பிடியில் ஈடுபட்டால் மட்டுமே பயனடைய முடியும் என மீனவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
போசாக்கு குறைபாடு காரணமாக பாடசாலை செல்லும் மாணவர்கள் மயக்கமடைந்துள்ளனர். எனினும், இது தொடர்பிலான எந்தவொரு முறைப்பாடும் தமக்கு கிடைக்கவில்லை என மூதூர் பிரதேச சபையின் தலைவர் ரஜீஸ் தெரிவித்துள்ளார்.
அவர் சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மூதூரில் வசிக்கும் அப்பாவி மீனவர்களின் ஒரே வாழ்வு ஆதாரமாக மீன்பிடித் தொழில் காணப்படுகின்றது.
இந்தத் தொழிலின் மூலமே தமது அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்கின்றனர்.
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசு நாடாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இத்தகைய நாடுகளை மேற்கு உலகம் சோசலிச நாடுகளாகவே கருதுகின்றன. எனினும் தற்போது ஜனநாயகம் என்பது ஊடகவியலாளர்களின் உடல்களை பதம் பார்க்கப்பயன்படும் ஓர் கூரிய ஆயுதமாகவே பயன்படுத்தப்படுகின்றது எனக்கூறின் அது பிழையாகாது.
உண்மையில் சோசலிச கொள்கை என்பது ஆட்சியாளனும், பொதுமகனும் ஒன்றே என்பதாகும். எனினும், ஆட்சியாளர்கள் செல்வதற்காக பல மணி நேரம் கத்திரி வெய்யிலிலும், கடும் மழையிலும் குடிமக்கள் காத்திருக்க வேண்டிய நிலையொன்றே தோன்றியுள்ளது.
பெற்றோல் ஒரு லீற்றரின் விலை 157 ரூபாவாகவும், டீசல் ஒரு லீற்றரின் விலை 110 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
சோசலிச நாடுகளில் உழைக்கும் வர்த்தகத்தினருக்கு உரிய வகையில் பொருட்கள் சேவைகள் விநியோகிக்கப்பட வேண்டியது இன்றியமையாத ஒன்றாகக் காணப்படுகின்றது.
இதனையே மகாகவி பாரதி "தனியொருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்" என தனது கவிதையில் அக்கினி பறக்கத் தெரிவித்திருந்தார்.
நாட்டில் எவரும் வெறும் வயிற்றுடன் உறங்காமல் இருக்காதவாறு பார்த்துக்கொள்வதே ஆட்சி அதிகாரத்தின் தலையாய கடயைமாகும். இதனாலேயே அரசாங்கம் மூதூர் மீனவர்களுக்கு உணவு நிவாரணங்களை வழங்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.
முஸ்லிம் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பல அமைச்சர்கள் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்றனர். இதனை ஓர் இனப்பிரச்சினையாக முன்னெடுக்க முடியும்.
மாவிலாறு பகுதியில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிதி உதவிகள் வழங்கப்பட்டமை நினைவில் கொள்ள வேண்டிய ஓர் விடயமாகும்.
அப்பாவி முஸ்லிம் மீனவர்கள் வறுமையின் காரணமாக தற்கொலை செய்தோ அல்லது போசாக்கு குறைபாட்டினால் வாடியதன் பின்னரோ நீலிக்கண்ணீர் வடிப்பதில் எவ்வித பயனுமில்லை.
முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த அரசியல்வாதிகள் முதலில் தமது ஆழ்ந்த உறக்கத்தில் இருந்து விழித்தெழ வேண்டும். அப்போதுதான் அப்பாவி மீனவர்களை காப்பாற்ற முடியும்.
இந்த நிலைமை குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற உள்நாட்டு இணையத்தளமொன்றின் செய்தியாளரிடம் ரவூப் ஹக்கீமிடம் இது பற்றி வினவுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மீன்பிடித் தடை ஓர் அரசியல் பழிவாங்கல் சம்பவமா என்று எண்ணத் தோன்றுகின்றது.
அது உண்மையாக இருந்தால், ஜனநாயக நாட்டில் தமக்கு விரும்பிய ஓர் வேட்பாளனுக்கு வாக்களிக்கக்கூடிய உரிமை மறுக்கப்பட்டுள்ளது. அல்லது அவ்வாறு சுதந்திரமாக வாக்களிப்பதனால் பாரிய பின்விளைவுகளை அப்பாவி வாக்காளர்கள் சந்திக்க வேண்டிய பாதகமான அரசியல் பின்னணியொன்று உருவாகியுள்ளது. இதனை அதிகார துஷ்ப்பிரயோகம் என்று சொல்வதனைவிட வேறு எவ்வாறு குறிப்பிட முடியும்.
சமயத் தலைவர்கள், பெண்கள், அரசாங்க ஊழியர்கள், சிறுவர்கள் உள்ளிட்ட 50-க்கும் அதிகமானோர் மிக மோசமாக தாக்கப்பட்டுள்னளர். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் குண்டர் குழுவினால் இந்த அட்டூழியம் மேற்கொள்ளப்பட்டதாக "நவமணி" தமிழ் நாளிதழை மேற்கோள் காட்டி சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
மூதூர் பிரதேச மீனவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை ஓர் அரசியல் பழிவாங்கலாக இருந்தால் தனது விரல்களாலேயே கண்களை குத்துவதற்கு நிகரான செயலாகும்.
மீன்பிடித் தடைக்கு எதிராக மூதூர் மீனவர்கள் கடந்த திங்கட்கிழமை முழு அடைப்பில் ஈடுபட்டனர். சுமார் 2,000 மீனவர்கள் இந்த முழு அடைப்பில்கலந்து கொண்டனர்.
தமது வாழ்வாதாரத்தை மேற்கொள்ள முடியாத நிலையில் மூதூர் மீனவர்கள் சொல்லொன்னா துன்பங்களை எதிர்நோக்க நேரிடும் என்பதில் எவ்வித சந்தேகமும். எனவே இந்த பிரச்சினைக்கு விரைந்து தீர்வுகள் பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும்.
முஸ்லிம் அமைச்சர்களே! அல்லா உங்களிடம் நீங்கள் என்ன பதவி வகித்தீர்கள் என்று கேட்கப் போவதில்லை. மாறாக உங்களது தொழிலை நீங்கள் நேர்மையாக செய்தீர்களா என்றே கேட்பான் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி: புதினம்
Saturday, May 31, 2008
மூதூர் கடற்றொழிலாளர்கள் மீதான மீன்பிடித் தடையானது மகிந்தவின் ஒரு அரசியல் பழிவாங்கல்?: "த மோர்ணிங் லீடர்"
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment